Thursday 24 September 2015

இரண்டு கவிதைகள்


கடந்தபடியிருக்கிறாள்
இந்த தூரத்தை
அவள் நம்பிய கடவுள்களுக்கு வேறு பணிகள் இருக்கின்றன
ஊசி முனை தவங்கள்
பொய்த்த போதும்
வரங்களில் வேண்டிக்கொள்கிறாள்
தன் இனத்திற்கும்
காப்பாற்றியபடியிருக்கும் யாவற்றிற்குமாக
வறண்ட தேசத்திற்கு
முடி சூடியவனுக்காக
துவங்குகிறாள்
மறுபடியும்
ஒற்றைக் கால் தவத்துடன்
தன நீள் பயணத்தை
🌹🌹
வைராக்கியம் பொதிந்த
தன் பேழையை
பரம்பரை மூதாதையிடம்
கையளித்துவிட்டு
ஏதும் உறுத்தலில்லாதது போல்
கை கோர்க்கிறாள்
முன்னால் நகரும்
தன் முகவரி ஒன்றோடு
-அம்சப்ரியா

சமாதானம் செய்கிறேன்

ஒரு பறவையின் சிறகுகளுக்குள்
ஒரு மரத்தின் கிளைகளுக்குள்
கடலின் அலைகளுக்குள்
நிலத்தின் புழுதிக்குள்
புதைந்து விட தவிக்கும்
இம் மனதிற்கு
இன்று ஒரு
சாக்லெட் கொடுத்து
சமாதனம் செய்கிறேன்

-அம்சப்ரியா

நன்றிக் கடன்

தரை தளத்தின் 
மூன்றாவது படியில் காத்திருக்கிறாள்
காய்ச்சல் இருமல் தலைவலி வயிற்றுவலி
இவைகள் மட்டுமே நோய்களென்று
அறிந்திருந்த அவளிடம்
புரியாத மொழியில்
அறியாத நோயை சொல்கிறார் மருத்துவர்.
அவனுக்காக
எதையும் தாங்குமவள்
கடனைத் தாங்கும்
வல்லமையை இறைஞ்சுகிறாள்
மருத்துவமனை கடவுளிடம்
அவரோ நன்றிக்கடனாக
மருத்துவர் பக்கம்.

சந்தர்ப்பம் பார்த்து...

என் தாத்தன் காலத்தில் படிப்பில்லை 
ஆனாலும் கேட்டீர்கள்,
அப்பன் காலத்தில்
கொஞ்சம் படிப்பிருந்தது
ஆனாலும் கேட்டீர்கள்,
இப்போது எனக்கும் படிப்புண்டு

ஆனாலும் கேட்கிறீர்கள்,
சந்தர்ப்பம் பார்த்து
சாதி என்னவென்று!